January 31, 2014
தனித்திருந்தேன்
தனித்துறங்கும்
இரவுகளில்
தலையனை
தேவையிருப்பதில்லை,
உனக்கான
அணைப்புகள்
எதற்குமானதல்ல.
January 30, 2014
பூ
ஆயிரம்
ஒற்றை ரோஜாக்கள்
அணிந்துகொள்,
முழம்
மல்லியணிந்து கொல்லாதே!
January 29, 2014
விதி
எதன் பொருட்டும்
பிரிவேற்க
மறுக்கிறது
மனம்,
அதுபற்றி
யாதொரு
கவலையுமின்றி
விளையாடித்
தீர்க்கிறது விதி.
January 28, 2014
சமாதானம்
பெருஞ்சண்டைக்கு
பின்
ஏதுமொழியாமல்
முத்தம்
தந்து போகிறாய்,
அதுதான்
சமாதானமென்றறியாமல்
இன்னும்
பிணங்கியபடி
நான்.
January 27, 2014
சமன்
வெப்பச்சமனிலை
வேண்டித்தான்
முத்தம் தந்தேன்,
சமனிழந்து
துடிக்குது மனம்.
January 26, 2014
உன்னதம்
நீயுறங்கி
நான்
பார்த்தருக்கும்
தருணங்களே
"வாழ்வின் உன்னத நொடிகள்"
எனப்படுவது.
January 25, 2014
உணவு
உன் அன்பை
உண்டு உண்டே
என்
சுயநலச்சட்டை
உரிக்கிறேன்.
January 24, 2014
மடி கொடு
கவலைகள்
எல்லாமுன்
மடிசாய்ந்திட
சரியாகுமென
நம்புகிறாய்,
நானும்
நம்பத்தொடங்குகிறேன்.
January 23, 2014
துயிலறு
சிறுபிள்ளையென
மடிமீதேறியுறங்குமுன்னை
எழுப்ப மனங்கொள்ளாது
நெடுநேரம்
விழித்திருக்கும்
இரவுகள்
பல்கி பெருகட்டும்.
January 22, 2014
கொடை
எல்லாப்
புரிதல்களுக்குப் பின்னும்
முளைத்தெழும்
பிணக்குகள் போல
எல்லா
பிணக்குகளின் பின்னும்
துளிர்விடுகிறது புரிதல்.
இம்மாயச்
சுழற்சியில்
வலுப்பெறும்
நேசம்
நம் கொடை!
January 21, 2014
தூரக்கண்ணீர்
நின்
கண்ணீர்
தாங்கும் வல்லமையற்றவன்
என்பதால்தானோ
என்னவோ,
எல்லா
சண்டைகளும்
தூரமிருக்கையில்
நிகழ்ந்தேருதோ?
January 20, 2014
காலப்பசி
ஒன்றாயுறங்கி
ஓரிரவாவதற்குள்
கதவைத்தட்டியழைக்குதிந்த
காலப்பேய்,
உன் பசலையுண்டே
பசியாறும் போல.
January 19, 2014
காலம்
காலத்திடம்
கணக்குவழக்கற்ற
கோபத்திலிருக்கிறேன்,
பிரிதல் நிமத்தமாய்
சேர்த்துவைத்துப்
பார்க்கிறது நம்மை.
இன்னுமெத்தனைக்
காலமென
கணக்கு கேட்க வேண்டும்.
January 18, 2014
பயணம்
நினைவெங்கும்
நீ
நீள்
பயணம்
செய்தபடியிருக்க,
பாதைகளில்
கவனமின்றி
பயணிக்கிறேன்.
January 17, 2014
வழமை
புன்னகைக்குள்
மென் சோகம்
மறைக்குமுன்
வழமையறியாது
நிலைமை
சரியெனயெண்ணும்
பேதையாய் நான்.
January 16, 2014
தூரம்
தொலைவேக
நோயுறும்
நீயொரு
விந்தைப்பிறவி,
இனி
தூரம்
தூரமாகட்டும்
நமக்குள்
January 15, 2014
காலை
குழந்தையென
நெஞ்சேறியுறங்குமுன்
சிரம் கோதும் விரல்களும்
இமை மோதும் விழிகளுமென
மெல்ல நகரும்
காலைகளில்
தேநீர்
தேவையாயிருப்பதில்லை.
January 14, 2014
நேரம்
பிரிவறுக்கும்
கலவியின்
வேகமும்
வியர்வையும்
முயக்கமும்
மயக்கமும்
பிறநேரக்
கலவிகளில்
ஒருபோதுமில்லை.
January 13, 2014
கலை
நேரமெடுத்து
நெடுந்தூரங்கடந்து
நின்
கண்கள் நோக்கியென்
கால்கள் நகர,
கைவிரல் கொண்டென்
கன்னந்தடவி
களைப்பு நீக்கும்
கலையெங்கு
கற்றாய் தோழி?
January 12, 2014
தனிமை
நீயற்ற
தனிமையை
இட்டு நிரப்ப
இரவுகளில்
இருள் கூட
போதுவதில்லை,
இருகரம் கோர்த்துன்
இடையிடையே
உறங்கிப் போன
நாட்களின்
நினைவு பற்றி
நேரமிழக்கிறேன்.
January 11, 2014
பிழை
என்
குரலுயர்த்தி
நின்
மொழியமிழ்த்தி
என் பிழை
மறைக்கின்றேனென
உணர்ந்திட
நீ படும்
சோகமென்
நெஞ்சழுத்திக் கொல்லும்.
January 10, 2014
பாசம்
எக்கரையிலிருந்தாலும்
அக்கறை
விசாரிப்புகளில்
முந்தியிருப்பவள்
நீ!
January 09, 2014
அருகிரு
நினைவுதப்பி
களைப்பு மேலிட
உறங்கிப் போனதொரு
மதியநேரம்
சட்டென
விழித்தெழுந்து
உனைத்தேடும்
விழிகள்
எந்த சாமாதானமும்
ஏற்பதில்லை.
அருகிரு ஆருயுரே!
January 08, 2014
தவறு
நின் இன்மை உணர்த்தும்
வெறுமையையிட்டு
நிரப்பும்
சொற்களறியாமல்
புறமேகியது
எவர் தவறு?
January 07, 2014
மருந்து
அன்பொழுக
சில வார்த்தைகள்
அதுவே
அருமருந்துன்
நோய்தீர்க்கவென்றறிந்தும்
உதிர்க்குதில்லையென்
இதழ்கள்,
காரணம்
அறியேனென்பதைக்காட்டிலும்
அறிந்தென்ன பயன்?
January 06, 2014
பசலை
நான் தூரமேக
நின்
தேகம் நோகும்
காட்சிகள்
கேளும் மட்டும்
'பசலை'
வெறும்
கவிஞர்கள்
கற்பனையென்றெண்ணி
இருந்தேன்.
January 05, 2014
களைப்பு
கலவிக் களைப்பை
கழட்டிக் கொண்டிருந்தது
அணியத் தொடங்கிய
ஆடைகள்.
உடுத்துவதென்பது
உறுத்தலாகிட
களைவதென்பதே
களைப்பை கலைக்கக்கூடுமாதலால்...
January 04, 2014
பொழுது
வெட்டி
ஒன்றன் மேலொன்றாய்
அடுக்கிவைத்த
ஒற்றை மரத்தின்
இரண்டு பாகங்களென
என்
நெஞ்சோடு படர்ந்திருக்கும்
நின்
குழல் கோதி
பொழுதிழக்கும்
கலவிக்கு முன்னான
அப் பொழுதே
சொர்கத்தின்
பக்கத்திலிருப்பதென்றுணர்ந்தேன்.
January 03, 2014
தூரம்
பாதைகள் மாறி
பயணங்கள் மாறி
படுக்கைகள் மாறி
தூரமெண்ணி
துயல் கொள்ளாது
தனிமையில் புரளும்
உடலம்
எப்படியோ விளங்கிக்கொண்டது
நேற்றிருந்த கதகதப்பு
இன்றில்லையென்பதை.
January 02, 2014
வரம்
தேவைகள்
அறிகிலேன்,
கேட்டதை
தந்திலேன்,
விரும்பியதை
செய்திலேன்,
என்றாலும்
துளியும் மாறா
நின்னன்பே
வரமெனப்படுவது.
January 01, 2014
விடியல்
இரவுகளிடம் பயமில்லை,
படுக்கையில்
பக்கத்தில்
நீயற்ற
விடியல்தான்
பெரும்பயம்
தந்துசெல்கிறது,
சட்டென விரைந்துவா
இன்னொரு விடியல் எழுவதற்குள்.
Newer Posts
Older Posts
Home