November 30, 2013

பொழுது

பெருமழை 
பெய்ந்து 
ஒய்ந்தது போல்
நினைவுகளெங்கும்
துளித்துளியாய்  
சொட்டிக் கொண்டிருக்கிறது 
சேர்ந்து 
கதைபேசி 
ஆலிங்கனம் 
செய்திருந்த பொழுதுகள்.

 

November 28, 2013

பொழுது

அருகிருந்து
கால் விரல் சொடுக்கி
அகமகிழ்ந்திருந்திடும்
அருந்தருணமிழந்து,
முகமறியா
மொழிதெரியா
புதுநகரினில்,
விடைபெறுகையில்
விரலசைத்து
வழியனுப்பிய
கடைநிமிடங்கள்
எண்ணிக் கழியுதென்
பொழுது.

November 26, 2013

அம்மு

வாழ்வினி என்றென்றும்
உன்னோடு 
என்றாகி
ஆண்டொன்றானது 
இன்றோடு.

அள்ள அள்ளக் குறையாத
செல்வம் அன்பன்றி
வேறில்லை,
அந்த அட்சயம்
நீயன்றி யாருமில்லை.

நானற்ற நாட்களிடை
நீயுற்ற வேதனையை
அருகிருக்கும் பொழுதுகளில்
அறிந்திடத் தந்திடுமின்
காதல்
என்றென்றும் நெஞ்சோடு.

November 19, 2013

வார்த்தை

சாரமற்ற
வழமை வார்த்தைகள்
வழி
சொட்டும் சோகம்
மௌன
ரணத்திலும்
கொடிது.

November 18, 2013

பயம்

தூரப்பிரிவறுக்கும்
வழி 
துரிதம் 
அறிகிலையேல் 
நின் 
துயரம் 
தினம் வளர்ந்தே 
நம் 
நேசம் தின்றிடுமோவென 
அஞ்சி 
நாள் இழந்தேன்.